தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறலாம்- பாஜக
தூத்துக்குடி: தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் கூட்டணிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
வெங்கையா நாயுடு மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போபர்ஸ் பீரங்கி ஊழல் விவகாரம் முடிந்து விட்டதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். அது முடிந்து போன விஷயமல்ல. இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அதற்குள் எப்படி முடியும்.
ராமர் பாலம் பாதுகாக்கப்பட வேண்டும். சேதுசமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும். இது லட்சக்கனக்கான மக்களின் மத உணர்வு பிரச்சனை.
இடதுசாரிகளுக்கு திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் சீட்டுகள் கிடைக்கும்.
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அதிகம் இல்லை என்றாலும், அகில இந்திய அளவில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெரும். தமிழகத்தில இருந்து தாமரை கண்டிப்பாக பாராளுமன்றத்திற்குள் நுழையும்.
மேலும் தமிழகத்தில் இடதுசாரிகள், காங் தவிர அனைத்து கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள்தான். எனவே தேர்தலுக்கு பிறகு யார் எங்களுடன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். தேர்தலுக்கு பின்னர் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றார் அவர்.