எரிபொருள் காலி-அவசரமாக தரையிறங்கிய ஜெ. ஹெலிகாப்டர்
சென்னை: எரிபொருள் காலியானதை அடுத்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். தற்போது வட தமிழகத்தில் பிரசாரம் செய்து வரும் அவர் தினமும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்துவிட்டு பின்னர் மீண்டும் சென்னை திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேடிலிருந்து நேற்று மதியம் 12 மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பின்னர் அவர் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்காற்று அதிகமாக வீசியுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டர் இயங்குவதற்கு கூடுதல் எரிபொருள் செலவாகியுள்ளது. ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்துக்கு அருகில் வந்த போது எரிபொருள் காலியாகும் நிலைக்கு வந்துவிட்டது.
இதையடுத்து விமானி, ஜெயலலிதாவிடம் சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிவிட்டு கடற்படை ஹெலிபேடுக்குச் செல்லலாம் என கூறியுள்ளார்.
ஆனால், ஜெயலலிதா தான் விமான நிலையத்திலே இறங்கி கொள்வதாகவும், அங்கிருந்து போயஸ் கார்டனுக்கு காரில் போவதாகவும் கூறினார்.
இதையடுத்து அவரது வருகைக்காக ஐஎன்எஸ் அடையார் ஹெலிபேடில் காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விமான நிலையம் வந்தனர்.
மாலை 5.35 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கிய ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் தனது இல்லம் திரும்பினார்.












Click it and Unblock the Notifications