சமாஜ்வாடியிலிருந்து விலக அமர்சிங் முடிவு - முலாயம் போக்கால் அதிருப்தி
ராம்பூர் (உ.பி.): சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளரான அசம் கான் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் நடந்து வருவதால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர்களான அசம்கான் மற்றும் அமர்சிங் இடையிலான லடாய் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. அமர்சிங்குக்கு நெருக்கமான ஜெயப்பிரதாவுக்கு சீட் கொடுத்தது தொடர்பாக அவருக்கும், அசம் கானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் அசம்கானுக்கு சாதகமாக முலாயம் சிங் நடந்து கொள்வதாக அமர்சிங் அதிருப்தி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அமர்சிங் கட்சியில் நீடிக்க வேண்டுமானால், அவர் அசம் கானை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
முலாயமின் இந்த அறிக்கையால் அமர்சிங் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியிலிருந்து விலகப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராம்பூர் என்ற இடத்தில் ஜெயப்பிரதாவுக்கு வாக்கு கேட்டு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், முலாயம் சிங் யாதவின் பேவரைட் ஆகி விட்டார் அசம் கான். அசம் கான் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி வருவதைத் தடுப்பதற்குப் பதில், நான் அமைதியாக இருக்க வேண்டும் என முலாயம் சிங் யாதவ் கூறுகிறார்.
அனேகமாக அசம் கானிடமிருந்து எனக்கு ஒரு 'ஷூ' பரிசாக கிடைக்கும் என நினைக்கிறேன். இந்நேரம் அவர் தயார் செய்து கூட வைத்திருக்கலாம்.
அவரது ஷூவைப் பெறுவதற்காக நான் காத்திருக்கிறேன். ஷூவை ரெடியாக வைத்திருந்தால் நேராக என்னிடம் வந்து தாராளமாக தரட்டும். அதை வாங்கி நான் அலங்கரித்து மியூசியத்தில் வைப்பேன் என்றார் அமர்சிங்.