அதிமுகவுடன் உறவு என்று சொல்லவில்லை-சுதர்சனம்
சென்னை: ராமர் பாலத்தைக் காப்போம் என கூறி வரும் அதிமுக மதச்சார்பற்ற கட்சி அல்ல. அக்கட்சியுடன் உறவு வைப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சொல்லவில்லை என்று தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று மிகத் தெளிவாக ராகுல்காந்தி கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியபோதுதான், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று குறிப்பிட்டாரே தவிர, அ.தி.மு.க.வுடன் உறவு வைப்போம் என்று சொல்லவில்லை.
அதிமுக மதச்சார்பற்ற கட்சி என்று சொல்கிறார்கள். ராமர் பாலத்தை பாதுகாப்போம், சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்று ஜெயலலிதா கூறிவருகிறார். இதில் இருந்தே அ.தி.மு.க. மதசார்பற்ற கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
16 ஆண்டு பிரதமராக இருந்த நேருவுக்கே டெல்லியில் சொந்தமாக வீடு கிடையாது. இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராஜீவ்காந்திக்கும் டெல்லியில் சொந்த வீடு கிடையாது. சோனியா காந்தி அரசு வீட்டில் தான் இருக்கிறார். அவரது சொத்து கணக்கும் வெளியிடப்பட்டது.
ஆனால், அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோ, தேர்தல் பிரசாரத்தின்போது, எனக்கு எதுவும் இல்லை என்று கூறிவருகிறார். அவரது சொத்து கணக்கு எவ்வளவு என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
வாடகைக்கு ஆள் எடுத்து பிரசாரம்..
அ.தி.மு.க.வில் வலுவான பிரசாரக்காரர்கள் இல்லை. அதனால், சினிமாக்காரர்களை வாடகைக்கு பிடித்து பிரசாரத்தில் ஈடுபடவைக்கிறார்கள். அது மக்களிடம் எடுபடாது. தமிழர்கள் புத்திசாலிகள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 5 ஆண்டு கால சாதனைகளையும், தி.மு.க.வின் 3 ஆண்டுகால சாதனைகளையும் மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்றார் சுதர்சனம்.












Click it and Unblock the Notifications