நாகர்கோவில் வந்த உம்மன்சாண்டி கொடும்பாவி எரிப்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசாரம் செய்ய வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது கொடும்பாவியை சமகவினர் எரித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சனை ஆதரித்து கேரள முன்னாள் முதல் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான உம்மன்சாண்டி இன்று பிரசாரம் செய்தார். இதற்காக அவரை வரவேற்று மாவட்டம் முழுவதும் காங்கிரசார் போஸ்டர் ஓட்டியிருந்தனர்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தியோடர் சேம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் நாகர்கோவில் மீனாட்சிபுரம் செம்மாங்குடி சாலையில் உம்மன்சாண்டியின் கொடும்பாவிகள் எரித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து சமகவினர் கூறுகையில், நெய்யாறு இடதுகரை சாலையில் தண்ணீர் திறப்பதற்கு உம்மன்சாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். அதை கண்டிக்கும் வகையில் அவரது கொடும்பாவியை எரித்தோம் என்றனர்.
இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.