பிஸ்வாஸ் கார் சோதனை - ராஜபாளையத்தில் பார்வர்ட் பிளாக் சாலை மறியல்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பார்வர்டு பிளாக் கட்சியின் பொது செயலாளர் பிஸ்வாஸ் காரை போலீசார் சோதனை செய்ததால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவேசம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் பொது செயலாளராக இருப்பவர் பிஸ்வாஸ். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து அக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் அவர் நேற்று தென்காசி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளி அருகில் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு 11 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் காரில் பிஸ்வாஸ் சென்றார். அப்போது பணியில் இருந்த பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் முருகன், பிஸ்வாஸ் காரை சோதனையிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வர்டு பிளாக் கட்சி தொண்டர்கள் ராஜபாளையம் -மதுரை ரோட்டில் ரோட்டில் திடீர் சாலை மறியல் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., முருகேசன், சாலை மறியலில் ஈடுபட்ட பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தார். பின்னர் பயிற்சி எஸ்.ஐ. முருகனை டிஎஸ்பி கண்டித்தார்.
இது குறித்து பார்வார்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
போலீசார் ஒரு தலைப்பட்டசமாக நடந்து கொள்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரை நடு ரோட்டில் நிறுத்தி சோதனை செய்ய தைரியம் உள்ளதா.
பிஸ்வாஸ் ஒரு நாகரிகமான தலைவர். அவர் காரை சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்றார்.