மன்மோகன் வருகை: ஹெலிகாப்டர் பயணம் ரத்து-காரில் சென்ற ஜெ.
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் வரும் விமானம் தரையிறங்கிய பிறகே அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு காரில் சென்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்னை வந்தார்.
அவர் மாலை 4.20 மணிக்கு துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
மன்மோகன் கிளம்புவதற்கு சற்று முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆவடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் விமானம் விரைவில் தரையிறங்க இருப்பதால் அதன் பின்னர் தான் ஹெலிகாப்டரை இயக்க அனுமதி வழங்க முடியும் என ஜெயலலிதாவிடம் கூறினர்.
இதையடுத்து ஜெயலலிதா தனது ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, காரில் ஆவடி புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு திருவள்ளூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து மாலை 4.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பறந்தார்.












Click it and Unblock the Notifications