இந்தியா செய்த ராணுவ உதவி மகத்தானது-ரணில்

இலங்கைக்கு எந்த வகையான ராணுவ உதவியையும் இந்தியா செய்யவில்லை. தற்காப்புப் பயிற்சியை மட்டுமே அளித்தோம் என பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என பலரும் கூறி வரும் நிலையில், அவை எல்லாமே பொய், இலங்கைக்கு முழுக்க முழுக்க உதவியது, ராணுவ ரீதியாக உதவியது இந்தியா மட்டுமே என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.
ராணுவ ரீதியாக இந்தியா சகல உதவிகளையும் செய்ததாகவும் ரணில் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியாவின் டைம்ஸ் நவ் டிவிக்கு ரணில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு, இந்தியா ஆக்கப்பூர்வமாகவும், உறுதியாகவும் ஆரம்பத்திலிருந்தே உதவி வருகிறது. விடுதலைப் புலிகளின் பலத்தை ஒடுக்கியதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது.
நான் பிரதமராக இருந்த காலம் முதலே இந்தியாவும், வளர்ச்சி அடைந்த பிற நாடுகளும் எங்களுக்கு உதவி வந்து கொண்டுள்ளன. முன்பு சில தடைகள் இருநதன. இருப்பினும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்னர் ராணுவ உதவிகளைப் பெற எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனது.
உதாரணத்திற்கு, இலங்கை கடற் பகுதியை தங்கள் வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகளின் கப்பற்படை பலத்தை நாங்கள் இந்தியாவின் உதவியுடன்தான் ஒடுக்கினோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவி இல்லாமல் கடற்புலிகளை நாங்கள் ஒடுக்கியிருக்க முடியாது.
இந்தியா தவிர அமெரிக்கா போன்ற மேலும் சில நாடுகளும் உதவின. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் கட்டமைப்பை நாங்கள் முறிக்க முடிந்தது.
இதுதவிர உளவுத் தகவல்கள் பரிமாற்றத்திலும் எங்களுக்கும், இந்தியா போன்ற பிற நாடுகளுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இப்போதும் கூட அது தொடருகிறது. எங்களுக்குத் தேவையான உளவுத் தகவல்களைத் தருவது, பயிற்சிகள் உள்ளிட்டவற்றை நாங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெற்று வருகிறோம்.
இந்தியாவுடன் உளவுத் தகவல் பரிமாற்றம் தொடர்பாக நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது. பல முக்கிய தகவல்களை இந்திய அரசு எங்களது படைகளுக்கு வழங்கியுள்ளது.
வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கான அதி நவீன ரேடார்களையும் இந்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார் ரணில்.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக இந்தியா செய்த தாராள உதவிகள் இன்று அப்பாவித் தமிழர்களைத்தான் அதிகம் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரணிலின் பேட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications