திமுக-காங்கிரசுக்கு எதிராக கோப அலை-ராமதாஸ்
திருவண்ணாமலையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த 3 வாரக்காலமாக நான் 39 மக்களவை தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறேன். மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான ஒரு எதிர்ப்பு அலை, கோப அலை வீசுவதை என்னால் உணர முடிந்தது.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஆளும் கட்சியினரின் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, அப்பாவிகளிடமிருந்து நிலம் பறிப்பு, மணல் கொள்ளை, அரிசி கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை ஆகியவற்றுடன் இனப் படுகொலைக்கு ஆளாகிவரும் இலங்கைத் தமிழர்களை காக்கக் தவறியிருப்பதுடன், அவர்களுக்கு திமுகவும், காங்கிரசும் சேர்ந்து செய்த துரோகமும் கபட நாடகங்களும் மக்களின் கோபத்திற்குக் காரணமான அடிப்படை அம்சங்கள்.
எனவே, இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மக்கள் மிகத் தெளிவாக தீர்ப்பினை அளிக்கக் காத்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக மத்திய அரசை தாங்கிப்பிடித்த பெரிய கட்சிகளில் திமுகவும் ஒன்று.
மாநிலத்தின் நலனுக்காகவும், ஈழத்தமிழர்களை காப்பதற்காகவும், அங்கு நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்காகவும் மத்திய அரசை வலியுறுத்தி செயல்படச் செய்ய திமுக மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பதற்கு சிறிய கட்சிகள் எல்லாம் உறுதியளித்தோம்.
அதைப் பயன்படுத்தி மத்திய அரசை செயல்பட வைப்பதில் திமுக தோல்வியடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் கட்சி துரோகம் இழைத்திருக்கிறது என்றும் மக்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சட்ட விரோதமானது. பணம் வாங்காதீர்கள் ஜனநாயக உரிமையை விற்று விடாதீர்கள் என்பதை வலியுறுத்தி கருணாநிதி அறிக்கை வெளியிட வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பல விளம்பரம் செய்யும் அவர் இந்த வேண்டுகோளை அரசு செலவில் விளம்பரம் செய்ய முன் வரவேண்டும்.
பணம் கொடுப்பவர்கள் ஆளுங்கட்சியினராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என 3 முறை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசின் அதிகாரபீடம் காலில் போட்டு மிதித்துள்ளது. இந்திராவின் மருமகளே, தாயே இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று கெஞ்சி கூத்தாடுவதைத் தவிர திமுக தலைவர் கருணாநிதி எதையும் செய்யவில்லை.
தமிழ் ஈழத்தை அமைக்க பாடுபடுவேன் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு உலகத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, இங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது. ஜெயலலிதா அறிவித்து விட்டார். எனவே நாமும் சொல்லி வைப்போம் என்ற தோரணையில் கருணாநிதியும் தமிழ் ஈழம் அமைய முயற்சிக்கப் போவதாகக் கூறியிருக்கிறார்.
கருணாநிதி பேசுவார், சொல்லுவார், ஆனால் செய்யமாட்டார். ஜெயலலிதா ஒன்றைச் சொன்னால் செய்து முடிப்பார். இதை மக்கள் நம்புகிறார்கள்.
கடைசி அரை மணி நேரத்தில்தான் கள்ள ஓட்டு விழும். ஆனால் இந்த தேர்தலில் வாக்கு பதிவு தொடங்கும் 1 மணி நேரத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட ஆணை பிறப்பித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போக கூடாது என்றார்.