கருப்புக் கொடி: பாரதிராஜா-நெடுமாறன் கைது

ஈழத்தில் போரை நிறுத்தாமல் சோனியா தமிழகம் வரக் கூடாது. மீறி அவர் வந்தால், கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம் என தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று மால சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.சுந்தர்ராஜன், தமிழர் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையின் ஓரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 5 போலீஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு அருகில் இருந்த திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதேபோல அதே பகுதியில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியாகாந்தி மற்றும் ராஜபக்சே வேடமணிந்த இரண்டுபேர் கைகொடுத்து நின்று கொண்டிருக்க அவர்களுக்கு கீழ் இறந்த கைக்குழந்தைகளை வைத்து பெண்கள் அழுவதுபோல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இவர்கள் அனைவரும் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
சென்னை மெமோரியல் ஹால் அருகில் பெண்கள் இயக்க கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள் இயக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீலு தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நேற்று சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையி ஆஜரப்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் மனு...
இந்நிலையில் பாரதிராஜாவின் மைத்துனரும், இயக்குனருமான மனோஜ் குமார் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், பாரதிராஜா, நெடுமாறன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சம்பவத்தின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. போலீசார் அவர்கள் அனைவரையும் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.
அவர்களை அரசியல் சட்டம் 22 (1), 21 மற்றும் குற்றவியல் சட்டம் 50, 50 ஏ ஆகிய பிரிவின் கீழ் கைது செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், இதில் போலீசார் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. பாரதிராஜா உள்ளிட்டோரை கைது செய்தது, சட்ட விரோதமானது.
இது தொடர்பாக காவல்துறை தலைவர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோருக்கு தந்தி கொடுத்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க வேண்டும். இந்த மனுவின் முக்கியத்துவத்தை கருதி அதை உடனே விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications