40 தொகுதிகளிலும் திமுக பணம் தருகிறது-அதிமுக
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் அனுப்பியுள்ளது.
அதிமுக அரசியல் ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், நாடாளுமன்ற அதிமுக தலைவர் வி.மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நவீன்சாவ்லாவை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.
அதில்,
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் 13ம் தேதி வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு உள்ளனர்.
மேலும் 40 தொகுதிகளிலும் வார்டு மற்றும் பூத் வாரியாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ. 3,000மும், அதற்கு மேலும் திமுக அணியினர் கொடுத்து வருகின்றனர். இது குறித்து அதிமுக தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தும் தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டு வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும். சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, டிஜிபி ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.