எல்டிடிஇ தடை நீக்கம்: 'ஜெ குரல் கொடுக்க வேண்டும்'

திருச்சி புத்தூர் நாலு ரோட்டில் நேற்று திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. ஆர்.கே. செல்வமணி தலைமை தாங்கினார். சீமான் பேசினார்.
அவர் பேசுகையில், சென்னையில் பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் நிவாரண பணிகளுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வோம், இந்திய அரசு சார்பில் ரூ.100 கோடி, தமிழக அரசு சார்பில் ரூ.25 கோடி ஆக மொத்தம் ரூ.125 கோடி இலங்கைக்கு உதவி தொகையாக வழங்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.
இதற்கு முன் இலங்கைக்கு 2 ஆயிரம் கோடி நிதி உதவியினை இந்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த பணம் எதற்காக வழங்கப்பட்டது? தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்திற்கு சன்மானமாகவா?
5 ஆண்டுகாலம் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசாமல் இருந்து விட்டு இப்போது பேசுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் உணர்வு வரவேண்டும். 60 ஆண்டுகளாக இனப்பகை ஏற்பட்ட பின்னர் தமிழர்களும், சிங்களர்களும் எப்படி ஒருங்கிணைந்து வாழமுடியும்?
தனி தமிழ் ஈழமே ஒரே வழி என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழத்தை உருவாக்குவோம் என்றும் சொல்லி இருக்கிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்வதற்கு அழுத்தமாக குரல் கொடுத்தது நான் தான் என்று ஜெயலலிதா ஏற்கனவே பேசியவர் தான். எனவே அவர் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி குரல் கொடுத்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்து கொள்வோம். இந்த ஒரு உதவியை மட்டும் ஜெயலலிதா செய்யவேண்டும்.
ஜெயலலிதா எப்போதுமே தான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர். அந்த அடிப்படையில் இந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.
இறக்கி விடப்பட்ட மன்சூர் அலிகான்...
ஆனால் இந்த நிகழ்ச்சியில் டைரக்டர் பாரதிராஜா, மணிவண்ணன், சுந்தர்ராஜன் உள்பட நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் சீமான், சினிமா பாடலாசிரியர் அறிவு மதி, இயக்குனர் சிவா, கவுதமன், திருச்சந்தர், வக்கீல் ரமேஷ் ஆகியோர் பேசினார்கள்.
இயக்குனர் சீமான் மேடைக்கு வந்ததும், திருச்சி பாராளுமன்ற தொகுதி லதிமுக வேட்பாளரான நடிகர் மன்சூர் அலிகான் திடீர் என மேடையில் ஏறினார். இயக்குனர் சீமானுக்கு சால்வை அணிவிக்க போவதாக கூறிக்கொண்டு சால்வையுடன் சென்றார்.
ஆனால் செல்வமணி மற்றும் மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மன்சூர் அலிகான் சால்வை அணிவிப்பதற்கு தடை விதித்தனர்.
இந்த மேடையில் எந்த வேட்பாளரையும் ஏறுவதற்கு நாங்கள் அனுமதிக்க வில்லை. மன்சூர் அலிகானின் தமிழ் உணர்வுக்கு நன்றி. அவர் சால்வை அணிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மைக்கில் அறிவித்தனர்.
இதனால் மன்சூர் அலிகானுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மன்சூர் அலிகான் பிடிவாதமாக சால்வையை அணிவிக்க முயற்சி செய்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மன்சூர் அலிகானை மேடையை விட்டு கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆத்திரம் அடைந்த மன்சூர் அலிகான் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.
நிலைமை மோசமாக போய்க்கொண்டிருந்ததை உணர்ந்த போலீசார் மன்சூர் அலிகானை கீழே இறங்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மன்சூர் அலிகான் திமிறிக்கொண்டு அவர்களது கையை தட்டி விட்டார்.
இதையடுத்து ஏராளமான போலீஸார் மன்சூரைப் பிடித்து மேடையை விட்டு இறக்கி விட்டனர். பின்னர் தள்ளிக் கொண்டு போய் அவரது காரில் ஏற்றி விட்டனர்.
இதையடுத்து போலீஸாரை நோக்கி புலம்பியபடி காரில் ஏறி கிளம்பிப் போனார் மன்சூர்.












Click it and Unblock the Notifications