சம்பந்தமில்லாமல் பேசும் கருணாநிதி: ஜெ தாக்கு
சென்னை: நான் இப்போது தனி ஈழம் கோருவதற்கும், தமிழ்ச்செல்வன் இறந்ததற்கு முதல்வர் கருணாநிதி கவிதை பாடியதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் கருணாநிதி என கூறியுள்ளார் ஜெயலலிதா.
சென்னையில் பிரசாரத்தை முடித்த பின்னர் செய்தியாளர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
அப்போது, தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்ப்பு தெரிவித்தவர் தான் ஜெயலலிதா. இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்றும் நீங்கள் கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
நான் இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்று கோருவதற்கும், தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல் கவிதை பாடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கருணாநிதி ஏதோ சம்பந்தம் இல்லாததை பற்றி பேசுகிறார் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தின் போது மக்களின் உற்சாகமும், வரவேற்பும் பிரமிக்கத்தக்க அளவிற்கு இருந்தது. இது எனக்கு புதிய புத்துணர்ச்சியை தந்து இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் 40-க்கு 40 தொகுதிகளிலும் முழுமையாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் ஜெயலலிதா.