மதுரை உதவி ஆணையர்-இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
மதுரை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மதுரை காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மு.க.அழகிரி போட்டியிடும் மதுரை தொகுதியில் பெருமளவில் தேர்தல் விதி மீறல்களும், முறைகேடுகளும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்தது. மேலும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி மதுரை தொகுதியில் தேர்தல் பார்வையாளர்களும், அதிகாரியும் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தங்கவேலுவும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை திலகர் திடல் உதவி ஆணையர் ஜெயக்குமார் கவனிப்பார்.
அதேபோல கரிமேடு இன்ஸ்பெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது பணியை திலகர் திடல் இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications