வாக்குச் சாவடிக்குள் நுழைய அமைச்சர்களுக்கு தடை!
மதுரை: வேட்பாளராகவோ அல்லது வாக்காளராகவோ இல்லாத பட்சத்தில் எந்த ஒரு அமைச்சரும் வாக்குப்பதிவு அன்று வாக்குச் சாவடிக்குள் செல்லக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதில்,
தேர்தல் நாள் அன்று வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு கட்சி சின்னம், கொடி, போஸ்டர் போன்றவைகளை வைத்திருக்க கூடாது. உணவு பண்டங்கள் எதையும் வழங்கக் கூடாது. அங்கு 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். கூட்டமாக இருக்க அனுமதி இல்லை.
முகாம் பொறுப்பாளராக நியமிக்கப்படும் நபர் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். அந்த நபர்கள் குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது.
வேட்பாளராகவோ அல்லது வாக்களிக்க செல்லும் வாக்காளராகவோ இல்லாத பட்சத்தில் எந்த ஒரு அமைச்சரும் வாக்குச்சாவடிக்குள் செல்லக் கூடாது.
அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்கப்பட்ட நபர் வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்குள் பாதுகாப்பு அலுவலருடன் செல்லலாம். ஆனால், தொகுதி முழுவதும் பாதுகாப்பு அலுவலருடன் சுற்றி வரக்கூடாது.
அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு பெற்ற நபர்கள் வாக்களிக்க பாதுகாவலருடன் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறைகளை அரசியல் கட்சிகள் எப்படி பின்பற்றுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.