ஈழத்தில் உள்ள எங்கள் தமிழ் சொந்தங்களை காப்பாற்றுங்கள்: சோனியாவிடம் திருமா. கோரிக்கை
சென்னை: ஈழத்தில் உள்ள எங்கள் தமிழ் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள். போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றுங்கள் என்று சோனியா காந்திக்கு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று சோனியா - கருணாநிதி பங்கேற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தி.மு.க. அரசின் 3 ஆண்டுகால சாதனைகளே அதற்கு முதன்மையான காரணம். மத்திய, மாநில அரசுகளின் நல்லுறவு அடிப்படையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளும் ஒரு காரணம்.
சிந்தாமல் சிதறாமல் வாக்களிப்போம்...
சாதி வெறி சக்திகளிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அகில இந்திய அளவில், குறிப்பாக தமிழகத்திற்கு உள்ளது. அதனால், ஒரு வாக்கைக்கூட சிந்தாமல் சிதறாமல் இஸ்லாமியர்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அதற்கான தகுதி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.
பா.ஜ.க. ஆளும்போது தலித், பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை பாதுகாப்பது காங்கிரஸ் கட்சியால்தான் முடியும் என்பது என் கருத்து.
அன்னிய ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டியுள்ளது. சீன அரசு நம் நாட்டு இறையாண்மையில் தலையிட முயல்கிறது. சீன அரசின் தலையீட்டால் நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அருணாசல பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலம் ஆகும். ஆனால், அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு வரலாம் என்று சீன அரசு சொல்கிறது. சீன வரைபடத்தில்கூட அருணாசல பிரதேசத்தை சேர்த்துள்ளனர்.
பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா ஆகிய நாடுகளில் தலையீட்டில் இருந்து இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மதசார்பற்ற அரசை நிறுவ தொலைநோக்கு பார்வையுடன் முதல்-அமைச்சர் கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆகவே, இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அந்நிய சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற பா.ஜ.க.வால் முடியாது.
ஜ.நா.வில் இலங்கை பிரச்சினையை பற்றி பேசக்கூடாது என்று தடுத்தது சீன அரசு. சோனியாகாந்தி அம்மையாரிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் வாழும் எங்கள் தமிழ் சொந்தங்களை காப்பாற்றுங்கள். அங்குள்ள போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். அது உங்களால்தான் முடியும் என்றார் திருமாவளவன்.