வென்றால் கங்கை-காவிரியை இணைப்போம்-பாஜக
பொள்ளாச்சி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கங்கை மற்றும் காவிரி நதி இணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வி.எஸ்.ரமேஷை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெங்கய்யா நாயுடு பேசுகையில்,
காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது. நகரத்துக்கும், கிராமத்துக்கும் மிக அதிக வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மன்மோகன்சிங் பொம்மைப் பிரதமராக உள்ளார். சோனியாகாந்தி சூப்பர் பிரதமராகவும், லாலு பிரசாத் யாதவ் அல்ட்ரா பிரதமராகவும் இருந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்வரை காங்கிரஸ் ஆட்சியை ஆட்டிப் படைக்கும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களின் பணத்துக்குப் பாதுகாப்பில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய நெடுஞ்சாலைகள் 6 வழிச் சாலைகளாக மாற்றப்படும்.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் உள்ளது போல் நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு 18 வயதாகும்போது ரூ. 1.18 லட்சம் வழங்கப்படும்.
தேசத்தில் பயங்கரவாதம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை 100 நாள்களில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்படும். அனைத்து மக்களுக்கும் அடையாள அட்டை, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.