விமானத்தில் நடிகையிடம் சில்மிஷம்: மாஜி ஜோசப் விடுதலை
சென்னையில் வசித்து வந்தவர் லட்சுமி கோபகுமார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வந்தார். செய்தி வாசிப்பாளராகவும் விளங்கினார்.
கடந்த 2006ம் ஆண்டு இவர் சென்னையிலிருந்து கொச்சிக்கு தனியார் விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் அப்போதைய கேரள பொதுப்பணித்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சித் தலைவருமான பி.ஜே.ஜோசப்பும் பயணித்தார்.
தனக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஜோசப் தன்னிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் கூறினார் லட்சுமி.
இதையடுத்து மீனம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜோசப்பைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜோசப் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த சர்ச்சை கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜோசப் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த மோன்ஸ் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஜோசப், லட்சுமியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பான வழக்கு ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பளித்தார். ஜோசப் மீதான புகார்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும், ஆதாரமும் இல்லை என்று அவர் உத்தரவிட்டு ஜோசப்பை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
தீர்ப்பைக் கேட்பதற்காக ஜோசப், அவரது மனைவி சாந்தா மற்றும் குடும்பத்தினர், கட்சியினர் வ்நதிருந்தனர். தீர்ப்பைக் கேட்டதும், கடவுளுக்கு நன்றி, உண்மை வென்று விட்டது என்றார் ஜோசப்.
இந்த நிலையில் ஜோசப் விடுதலையாகி விட்டதால் அவர் மீண்டும் பதவியற்பதற்கு வசதியாக தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக மோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோசப் கட்சியும், இடதுசாரி முன்னணியும் முடிவெடுக்கும் என முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஜோசப் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் லட்சுமி கோபகுமார் தற்போது போலந்தில் உள்ள தனது மகன் வீட்டில் இருக்கிறாராம். இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என லட்சுமியின் வக்கீல் சுதா ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.