நெடுமாறன், பாரதிராஜா உள்பட 180 பேருக்கு ஜாமீன்
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டி கைதான இயக்குநர் பாரதிராஜா, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் உள்ளிட்ட 180 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
சோனியா காந்தி சென்னைக்கு வந்தபோது, சைதாப்பேட்டை மறைமலைஅடிகளார் பாலத்தின் அருகில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 67 பேரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 113 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் வக்கீல் சங்கரசுப்பு உள்பட வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மாஜிஸ்திரேட்டு பெஞ்ஜமின் ஜோசப் முன்பு வந்தது. அப்போது பாரதிராஜா உள்பட கைதானவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த கைது முறையாக செய்யப்படவில்லை. மேலும், இவர்களை தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுக்கவே சிறையில் அடைத்து உள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என வக்கீல்கள் கோரினார்கள்.
அரசு தரப்பு வக்கீல் பன்னீர்செல்வம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கைது பற்றி முறையாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை விடுதலை செய்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்றார்.
ஆனால் அரசுத் தரப்பு கோரிக்கையை நிராகரித்த மாஜிஸ்திரேட், பாரதிராஜா, பழ.நெடுமாறன் உள்பட 180 பேரையும் ரூ. 5000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், 180 பேரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க கூடாது. மேலும், தேர்தலில் வன்முறை ஈடுபடமாட்டோம் என்று பிரமாண ஒப்புதல் வாக்கு மூலத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிபதி விதித்தார்.