ஈழ படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும்: மிலிபான்ட்
நியூயார்க்: இலங்கையில் பெருமளவில் நடந்து வரும் தமிழினப்படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தை ரஷ்யாவும், சீனாவும் புறக்கணித்து விட்டன.
அதேபோல வியட்நாமும் இதில் பங்கேற்கவில்லை. இந்த நாடுகள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் டேவிட் மிலிபான்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் வார இறுதியில் நடந்து வரும் படுகொலைச் சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. விரக்தியை ஏற்படுத்துகின்றன.
இந்தப் படுகொலைகள் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசவுள்ளனேன்.
ஆதாரங்களே இல்லாமல் நடந்து வரும் இனப்படுகொலைப் போர் இது. உடனடியாக சர்வதேச சமுதாயம் இதுகுறித்து அக்கறை காட்ட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
முதலி்ல் அங்கு படுகொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போர்ப் பகுதியில் சிக்கியுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இலங்கையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்தும் நான் எழுப்பினேன். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
போர் நடைபெறும் பகுதியில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய அனைவருக்கும் வாய்ப்பினை இலங்கை அரசு வழங்க வேண்டும். வெளிப்படையாக நடந்து கொள்ள அது முன்வர வேண்டும் என்றார் மிலிபான்ட்.