பாகிஸ்தானுக்கு யுஎஸ் 57 மில்லியன் டாலர் நிதியுதவி!
வாஷிங்டன்: இலங்கை ராணுவ நடவடிக்கையால் பெரும் மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வரும் ஈழத் தமிழர்களுக்கான நிவாரணத்தி்ற்கு அமெரிக்கா பெரிய அளவில் உதவி செய்யாத நிலையில்,ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு உதவ 57 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அள்ளி வழங்கியுள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து தலிபான் மற்றும் அல் கொய்தா தீவரவாதிகளை ஒழித்துக் கட்ட பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமெரிக்காவின் தொடர் வற்புறுத்தலைத் தொடர்ந்து ராணுவத்தை களம் இறக்கியுள்ளது பாகிஸ்தான்.
இதன் காரணமாக ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க அரசு 57 மில்லியன் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு தூதர் ரிச்சர்ட் ஹால்ப்ரூக் அமெரிக்க காங்கிரஸ் கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அரசின் அவசர கால நிதியிலிருந்து இதுவரை 57 மில்லியன் டாலர் நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது.
கூடாரங்கள் அமைப்பது, உணவு, மருந்துப் பொருட்கள், பிற நிவாரணப் பொருட்களை வழங்குவற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார்.
ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து பத்து லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகப் பெரிய அளவிலான அகதிகள் நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்துள்ளதாகவும் ஹால்ப்ரூக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பெரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கையில் இதுவரை தீவிரவாதிகள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதுவரை இல்லை.
ஆனால் இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து வருகிறது இலங்கை ராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications