ஜெ. மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் தயாநிதி
சென்னை: மத்திய அமைச்சராக இருந்தபோது தான் முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது சென்னை கோர்ட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகளை சன் டி.வி.யுடன் இணைத்து அதன் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியதாகவும், இதனால் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த தயாநிதி மாறன், இதுதொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இருப்பினும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் தனது புகாரை மீண்டும் வலியுறுத்திக் கூறினார் ஜெயலலிதா.
இதையடுத்து எழும்பூர் தலைமை சென்னை அமைந்தகரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதே குற்றச்சாட்டை கூறினார். இதனால் தயாநிதி மாறன் ஜெயலலிதா மீது எழும்பூர் தலைமைபெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாநிதி மாறன் மீது புகார் கூறிய ஜெயலலிதா இதுதொடர்பாக சிபிஐ சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா, மத்திய தொலைத் தொடர்புத்துறை செயலாளர் டி.எஸ்.மாத்தூருக்கு எழுதிய கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.
அதில், தயாநிதி மாறன் தனது வீட்டில் சட்டவிரோதமாக ஒரு தொலைத் தொடர்பு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்ததாகவும், அதில் 24 ஐ.எஸ்.டி.என். இணைப்புகள் இருந்ததாகவும், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தி தனது சன் குழும சானல்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியதாகவும் கூறியிருந்தார் ஜெயலலிதா.
இதற்குப் பதிலடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அறிக்கை ஒன்றைப் பெற்று வெளியிட்டிருந்தார் தயாநிதி மாறன். அதில் மாறன் வீட்டில் தவறான இணைப்புகள் எதுவும் தரப்படவில்லை என்றும், அவரது பெயரில் எந்த நிலுவைத் தொகையும் இல்லை எனவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.