உண்ணாவிரதம்-சேலம் சுயேட்சை வேட்பாளர் கைது
சேலம்: சேலம் மக்களவை தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வக்கீல் எம்.ஏ. ஷாஜகான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செம்மலையும் போட்டியிடுகின்றனர். இவர்களை தவிர்த்து பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
அவர்களில் வக்கீல் எம்.ஏ. ஷாஜகான் என்பவரும் ஒருவர். இவர் பலூன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தனது பிரசாரத்தின் போது ஏழை கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் அன்று ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந் நிலையில் இதை வலியுறுத்தி அவர் நேற்று சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இருந்தாலும் அவர் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க முயற்சி செய்தார். இதையடுத்து சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சுயேச்சை வேட்பாளர் ஷாஜகானை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications