For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வன்முறையுடன் நடந்த தேர்தல்- 65% வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

Polling
சென்னை: தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றில் இன்று ஆங்காங்கே வன்முறைகளுக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

தமிழகத்தில் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை முதலே வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

காலை 7 மணிக்குப் பதிவு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடியி்ல் நகர்ப்பகுதிகளை விட கிராமப் புறங்களில் படு வேகமாக வாக்குப் பதிவு நடந்தது. மக்கள் பெரும் ஆர்வத்துடன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

4.16 கோடி வாக்காளர்கள்-824 வேட்பாளர்கள்:

இன்றைய மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். மொத்தம் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தமிழகம் முழுவதும் 52,175 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 20,983 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அதிலும் 4,043 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் இந்த வாக்குச் சாவடிகளில் 7,115 பார்வையாளர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு15,424 கேமராக்கள் வைத்து வாக்குப் பதிவை படம் பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு...

சென்னையில் 117 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை கண்காணிக்க நாட்டிலே முதன்முறையாக வெப் கேமராக்கள் யன்படுத்தப்பட்டன.

இந்த வெப் கேமராக்கள் மூலம் ஓட்டுப் பதிவை கண்காணிக்க சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது.

மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

26 தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் இருந்ததால் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மற்ற தொகுதிகளில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 1.10 லட்சம் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

கருணாநிதி-ஜெயலலிதா வாக்களிப்பு..

முதல்வர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் வாக்களித்தார்.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் சசிகலாவும் வந்து ஓட்டுப் போட்டார்.

ரஜினி, அழகிரி, கனிமொழி ஓட்டுப் போட்டனர்:

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தி்ல் உள்ள வாக்குச் சாவடியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்தார். அவருடன் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தும் வந்து ஓட்டுப் போட்டார்.

மதுரையில் அழகிரி வாக்களித்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி உள்ளிட்டோருடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் வெளியில் நின்றிரு்நத செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தி்ல வெற்றி பெறுவேன். தென் மாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

அதேபோல முதல்வர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழியும் இன்று காலையில் வாக்களித்தார்.

சிவகங்கை மாவட்டம் கண்டனூர், சிட்டாலாச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஓட்டுப் போட்டார்.

நேராக உள்ளே போன தளவாய் சுந்தரம்..

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தளவாய் சுந்தரம் ஓட்டுப் போட வந்தபோது வரிசையில் நிற்காமல் நேராக வாக்குச் சாவடிக்குள் போனதால் வாக்களிக்க காத்திருந்த மக்கள் கொந்தளித்து விட்டனர்.

இதையடுத்து தளவாய் சுந்தரத்திற்கும், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சுரேஷ் ராஜனின் உதவியாளர் ராமசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக அதிமுகவினரும், எதிர்ப்பாக திமுகவினரும் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்ய போவதாக தளவாய் சுந்தரம் தெரிவித்தார். இதனால் ஆவேசமான திமுகவினர் தளவாய் சுந்தரத்துடன் வாக்குவாதம் செய்தனர். அதிமுகவினரும் அங்கு திரள 2 தரப்பினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானதால் மோதலில் ஈடுபட்ட திமுவினர்-அதிமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதையடுத்து அந்த வாக்குசாவடியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மற்ற மாநிலங்களி்ல்...

அதே போல உத்தரப் பிரதேசத்தில் 14, மேற்கு வங்கத்தில் 11, பஞ்சாபில் 9, உத்தர்காண்டில் 5, இமாச்சலப் பிரதேசத்தில் 4, காஷ்மீரில் 2, சண்டிகாரில் 1 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடந்தது.

இதையடுத்து மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுக்கள் எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

16ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X