18ம் தேதி 3வது அணி கூட்டம்-ஜெ.வுக்கு அழைப்பு
டெல்லி: தேர்தல் முடிவுகள் 16ம் தேதி வெளியாகவுள்ளதைத் தொடர்ந்து மூன்றாவது அணித் தலைவர்கள் கூட்டம் வருகிற 18ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், பிஸ்வாஸ் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்துக்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத தலைவர்கள் வருகிற 18-ந்தேதி டெல்லியில் கூடி விவாதிக்க இருக்கிறோம்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அப்போது மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவோம்.
3-வது அணியின் முதல் கட்ட கூட்டம்தான், இது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் தொடர்ந்து நான் பேசி வருகிறேன். இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னதே அவர்தான்.
மதச் சார்பற்ற ஜனதா தளம் எங்கள் அணியை விட்டு எங்கேயும் போய்விடவில்லை. அண்மையில் அணி மாறிய தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு நாங்கள் அழைப்பு அனுப்பவில்லை.
டெல்லியில் வருகிற 17ம் தேதி இடது சாரிகள் கூட்டம் நடக்கிறது. இதனையடுத்து 18ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நடைபெறும் என்றார் காரத்.