தென்காசி-தேர்தலை புறக்கணித்த 2 கிராமங்கள்!
தென்காசி: தென்காசி தொகுதியில் இருக்கும் இரண்டு கிராமங்களை சேர்ந்த சுமார் 1,100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தென்காசி தொகுதி, வாசுதேவநல்லூர் சட்டசபைக்கு உட்பட்ட பந்தப்புளி கிராமத்தில் மொத்தம் 838 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க பந்தபுளி கல்யாணி ஆரம்ப பாடசாலையில் எண் 334 வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு தரப்பினர் இடையே நீண்டகாலமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கோவில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட பிரிவினர் வழிபட அனுமதிக்கப்பட்டது.
இதனால் மற்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வாக்குப் பதிவை புறக்கணித்தனர். அங்கு ஒரு பிரிவை சேர்ந்த 105 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இதனால் வாக்கு சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
குடிநீர் வழங்க கோரி தேர்தல் புறக்கணிப்பு...
வாசுதேவநல்லூர், ராமசாமியாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முத்துசாமியாபுரம் என்ற கிரமாத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு 525 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அங்குள்ள யாதவர் துவக்கப்பள்ளி வாக்கு சாவடியில் வாக்குமையம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் செய்து தரப்படவில்லை என கூறி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வசதி செய்து தரும்வரை வாக்களிக்க போவதில்லை என தெரிவித்தனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் மட்டுமே வாக்களித்து விட்டு சென்றனர். இறுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 75 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதில் 9 பேர் 49 ஓ படிவத்தில் வாக்களித்தனர்.