பார்வையிழந்த மாணவர் வரலாற்றில் முதலிடம்
திருவண்ணாமலை: கண்பார்வை இல்லாத திருவண்ணாமலை மாணவர் ஒருவர் வரலாற்று பாடத்தில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதித்துள்ளார். மேலும் 1,114 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந் பிளஸ் 2 மாணவர் கோவர்த்தனன். இவர் பிறவியிலே கண்பார்வை இழந்தவர். இதை ஒரு குறையாக நினைக்காத அவர் படிப்பில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கடுமையாக உழைத்த அவருக்கு தற்போது நல்ல பலன் கிட்டியுள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் அவர் வரலாறு பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் அப்பாடத்தில் 197 மதிப்பெண் எடுத்துள்ளார்.
அரசியல் அறிவியல் பாடத்தி்ல் 190 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். மேலும் தேர்வில் மொத்தமாக 1,114 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அனைத்து பாடங்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தமிழில் 182, ஆங்கிலத்தில் 166, புவியியல் 189, பொருளாதாரம் 190 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தனது எதிர்கால திட்டம் குறித்து அந்த மாணவர் கூறுகையி்ல்,
கண்பார்வை இல்லாமல் போனது துவக்கத்தில் கடினமாக இருந்தது. தற்போது எனக்கு அதுவே ஒரு ஊக்க சக்தியாக மாறிவிட்டது. என்னாலும் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
நான் உலகிலே தலைசிறந்த வக்கீலாக வரவேண்டும் என நினைக்கிறேன். ஆனால், எங்கள் வீட்டில் இதற்கு என்னை படிக்க வைக்க வசதியில்லை. அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன் என்றார்.