காணாமல் போன நான்காவது அணி!
டெல்லி: முலாயம்-லாலு-பாஸ்வான் இணைந்து திடீரென உருவாக்கிய நான்காவது அணிக்கு பெரும் தோல்வியே கிடைத்துள்ளது.
இந்தக் கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு பிகாரில் 20 இடங்களில் தோல்வி கிடைத்துள்ளது. கடந்த முறை 24 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 4 இடங்களே கிடைத்துள்ளன.
தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றி்ல் தான் லாலு பிரசாத் யாதவே வென்றுள்ளார். பாடலிபுத்திரா தொகுதியில் வென்ற அவர் சரண் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
அதே போல ராம் விலாஸ் பாஸ்வான் தனது ஹாஜிபூர் தொகுதியில் தோற்றுவிட்டார். இந்தத் தொகுதியில் கின்னஸ் சாதனை அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று வென்றவர் பாஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 7 முறை தொடர்ந்து வென்றவருக்கு முதன்முறையாக தோல்வி கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் 4வது அணியின் முக்கிய கட்சியான முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு 24 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 36 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 12 இடங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காங்.குடன் கூட்டணி வைக்காதது தவறுதான்-லாலு:
இந் நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததாலேயே இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தது என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மந்திரி சபையில் 5 ஆண்டுகள் ரயில்வே மந்திரியாக கோலோச்சியவர் லாலு பிரசாத் யாதவ். ஆனால் தேர்தலின் போது பீகாரில் காங்கிரசை முடிந்தவரை அவமானப்படுத்தினார். 4 சீட்கள் தருவேன், வாங்கிக் கொள்ள சம்மதமா? என கிண்டலாக சோனியா காந்தியைப் பார்த்துக் கேட்டவர்தான் லாலு.
இதனால் கடுப்பான காங்கிரஸ், தனியாகவே அங்கு தேர்தலைச் சந்தித்தது.
இப்போது தேர்தல் முடிவுகள் லாலுவுக்கு பேரிடியாக அமைந்துள்ளன. அவர் கட்சி மொத்தம் ஐந்து இடங்களில்தான் வென்றுள்ளது. அவரது கூட்டாளி ராம்விலாஸ் பாஸ்வானுக்கோ அதுகூட கிடைக்கவில்லை. அவரும் தோற்றுப் போனார். இரு தொகுதிகளில் போட்டியிட்ட லாலுவும் ஒரு தொகுதியில் தோற்றார்.
எந்தக் கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்ட காங்கிரஸ் 3 தொகுதிகளில் வென்றுள்ளது.
தேர்தல் முடிவுகளைப் பார்த்து வெறுத்துப் போன லாலு, காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததுதான் இந்த மாபெரும் தோல்விக்குக் காரணம் என்றும், இது தங்கள் தவறுதான் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications