மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது காங். கூட்டணி

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் 145 இடங்களில் வென்ற காங்கிரஸ் இம்முறை 199 இடங்களில் வென்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. இதன்மூலம் கடந்த தேர்தலைவிட கூடுதலாக 54 இடங்களைப் பிடித்துள்ளது.
கேரளா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை புரட்டிப் போட்டு பெறும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரசுக்கு பெரும் வெற்றிகள் கிடைத்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 260 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்தக் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் 20 இடங்களிலும், திமுக 18 இடங்களிலும் வென்றுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் தேசிய மாநாட்டுக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன.
ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் அதை சில சிறிய கட்சிகளின் உதவியோடு அடைந்துவிட முடியும் என காங்கிரஸ் கருதுகிறது.
அதே நேரத்தில் முலாயம் சி்ங்கின் சமாஜ்வாடி கட்சி-லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியோர் அடங்கிய நான்காவது அணி நிபந்தனையில்லாத ஆதரவு தந்தால் அதை காங்கிரஸ் ஏற்கவும் தயாராக உள்ளது.
இந்தக் கட்சிகள் சுமார் 25 இடங்களில் வென்றுள்ளதால் இடதுசாரிகளின் ஆதரவை மீண்டும் கேட்பதில்லை என்ற முடிவுக்கும் காங்கிரஸ் வந்துள்ளது. மேலும் ஆட்சியை ஸ்திரமாக்க சிறிய கட்சிகளையும் வளைக்க காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.
அடுத்த பிரதமரும் மன்மோகன் சி்ங் தான் என்றும் காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
கூட்டணியிலிருந்து நிறைய கட்சிகள் வெளியேறிய நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரிய அளவில் சீட் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு இந்தத் தேர்தலில் பொய்த்துவிட்டது.
முக்கிய கட்சிகள் இருந்தபோது கிடைத்ததை விட தற்போது கூடுதலான சீட்களை காங்கிரஸ் வெல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் பெரும் உற்சாகமடைந்துள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே காங்கிரஸார் பெருமளவில் திரண்டு பட்டாசுகளைக் கொளுத்தியும், ஆட்டம் பாட்டத்துடனும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி காசு கொடுத்து வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை பாடியபடி காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆட்டம் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications