அத்வானி Vs ஜோஷி-பாஜகவில் மோதல் வெடித்தது
டெல்லி: தேசிய அளவில் பாஜகவின் தோல்விக்கு தவறான வேட்பாளர்களுக்கு சீட் தரப்பட்டதே காரணம் என்று மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
பாஜகவில் தீவிரமான அத்வானி எதிர்ப்பாளரான ஜோஷி நிருபர்களிடம் கூறுகையில்,
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கு அதிகமான முஸ்லீம்களுக்கு அந்தக் கட்சி சீட் தந்தது தான்.
அதே போல பாஜகவும் அதிக முஸ்லீம்களுக்கு சீட் தந்திருக்க வேண்டும். ஆனால், தவறான நபர்களுக்கு சீட் தந்துவிட்டார்கள். எங்களது தேர்தல் வியூகமும் தவறாகவே இருந்தது. (உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்தது அத்வானியும் அவரது தீவிர ஆதரவாளரான அருண் ஜேட்லியும் தான் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் தான் தோல்வி ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தில் வருண் காந்தியின் பிரச்சாரமும் எடுபடவில்லை என்றார்.
வருணின் சர்ச்சைக்குரிய பேச்சு தான் பாஜக தோல்வி்ககு காரணமா என்று கேட்டதற்கு பதிலளித்த ஜோஷி, இருக்கலாம்.. ஆனால்ஸ அது குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும் என்றார்.
இதன்மூலம் கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து பாஜகவுக்குள் பெரும் மோதல் வெடித்துள்ளது தெரியவந்துள்ளது. இந் நிலையில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் இன்று அத்வானியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.