நல்லி சில்க்ஸில் தீ- 5 தொழிலாளர்கள் பலி
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள நல்லி சில்க்ஸ் நிறுவனத்தில் நடந்து வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தொழிலாளர்கள், தீவிபத்தில் சிக்கி பலியானார்கள்.
சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் அருகே நல்லி சில்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நகை கடை கட்டும்பணி நடந்து வருகிறது.
இங்கு விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அர்க்கிசம்பாளையத்தை சேர்ந்த 8 பேர் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். அவர்களை மேஸ்திரி ரகு என்பவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை அழைத்து வந்தார்.
கட்டடத்தின் 5-வது தளத்தில் வெளிப்புற சுவரில் சிமெண்ட் பூசும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இரவு நீண்ட நேரமாகியும் இந்த பணி தொடர்ந்தது.
இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த கட்டட சாரத்தின் மேல் அமர்ந்து கொண்டு டியூப்லைட் வெளிச்சத்தில் வேலை செய்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் மின் விளக்கிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பில் கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த வயர் அறுந்து இரும்பு கம்பியின் மீது விழுந்தது.
உடனே கண் இமைக்கும் நேரத்தில் ஈரப்பதமாக இருந்த கட்டிடம் முழுவதும் மின்சாரம் பரவியது. இதில் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெங்கடேசன் (22), அய்யனார் (23), கார்த்திகேயன் (20), சதீஷ் (17) முருகன் (30) ஆகிய 5 பேர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.