பிரபாகரன் சுட்டுக் கொலை-இலங்கை அறிவிப்பு
இன்று காலை பிரபாகரன், புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோர் சில புலிகளுடன் ஒரு பாதாள அறையிலிருந்து ஒரு குண்டு துளைக்காத வேன் மூலம் தப்பியபோது அவர்களை ராணுவம் தடுத்து தாக்கியதாகவும்,
அப்போது இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், இறுதியில் அந்த வேன் மீது ராணுவம் ராக்கெட்டை ஏவி தாக்குதல் நடத்தி அதில் இருந்த அனைவரையும் கொன்றதாகவும் தெரிகிறது.
பினனர் அவர்களது உடல்களை மீட்ட ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் உறுதி செய்தார்..
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமநாயகே அந்தத் தகவலை உறுதி செய்தார். அவர் பலியானது உண்மை தான் என்றார்.
இந்தியாவும் உறுதி செய்தது:
மேலும் இத்தகவலை இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளரும் இன்று டெல்லியில் நிருபர்களிடம் உறுதி செய்தார்.
அவர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் இந்தியாவிடம் அதிபர் ராஜபக்சே உறுதி செய்துள்ளார் என்றார்.
டிஎன்ஏ சோதனைக்குப் பின் உறுதி செய்வோம்..
இது குறித்து இலங்கை ராணுவ செய்தியாளர் உதய நயணகாரா கூறுகையில், நாங்கள் இப்போது எதையும் உறுதிப்படுத்த விரும்பவில்லை. உடல்களை கைப்பற்றியுள்ளோம். டி.என்.ஏ சோதனைகள் நடக்க வேண்டியுள்ளது. அதன் பின்னரே எதுவும் கூற முடியும் என்றார்.
ராஜபக்சேவுக்கு வாழ்த்து..
இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவை வாழ்த்தும் வகையில் அவரது இல்லத்தில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் முப்படைத் தலைவர்களும், பல கட்சித் தலைவர்களும் சந்தித்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து தொலைக்காட்சி மூலம் அதிபர் ராஜபக்சே உரையாற்றப் போவதாகவும் அதில் பிரபாகரன் மறைவை அவர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் நாளை தான் தொலைக்காட்சியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.