'புலிகள் குறித்த செய்தி'-காங். தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு - உஷார் நிலையில் தமிழக போலீஸ்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த செய்தி காட்டுத் தீ போல தமிழகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், உடல் மீட்கப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தேர்தல் பணிக்குப் பின்னர் விடுமுறையில் சென்ற அனைத்து போலீஸாரும் உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை தூதரகத்திற்குப் பாதுகாப்பு..
சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயந்திர துப்பாக்கி போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள புத்தர் ஆலயம், வேப்பேரியில் உள்ள இலங்கை வங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இலங்கை விமான நிறுவனம் (ஏர்லங்கா) போன்ற இடங்களும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை துணைத் தூதர் அம்சாவின் வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பாதுகாப்பு..
தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களான சாஸ்திரி பவன், ராஜாஜி பவன், தலைமை தபால் அலுவலகம் போன்ற தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மத்திய அரசு அலுவலங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங். தலைவர்களுக்கும் பாதுகாப்பு..
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வீடுகள், அலுவலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வீடுகளுக்கும், வேலூரில் உள்ள ஞானசேகரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கும் மற்றும் காங்கிரஸ் முன்னணி பிரமுகர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுதலைப்புலிகளின் கொலை மிரட்டல் பட்டியலில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கும் ஏற்கனவே உள்ள பாதுகாப்போடு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிக்கும் மிரட்டல் இருப்பதால் அவரது இரு இல்லங்களுக்கும் ஏற்கனவே உள்ள பாதுகாப்போடு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழகம் முழுவதும் உள்ள 113 இலங்கை அகதிகள் முகாம்களும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடைகளை அடைக்க கூறியதால் பரபரப்பு..
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள நடேசன் தெருவில் சிலர் கூட்டமாக வந்து அங்குள்ள கடைகளை மூடுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி கே.பி.ஜெயின் கூறுகையில், எங்களுக்கு உஷாராக இருக்குமாறு தகவல்கள் வந்து கொண்டுள்ளன. நிலைமை தற்போது மோசமாக இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடற்படை மற்றும் கடலோலக் காவல் படையுடன் இணைந்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சிறப்புப் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications