மின்னணு இயந்திரத்துக்கு தடை-மன்சூர் வழக்கு
திருச்சி: மி்ன்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தனக்கு மிக குறைந்த ஓட்டுகள் கிடைத்ததாகவும், அதனால் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
திருச்சி தொகுதியில் நடிகர் டி. ராஜேந்தரின் லட்சிய திமுக சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் வெறும் 2,558 ஓட்டுகள் மட்டுமே பெற்றதாக கூறப்பட்டது. அவருக்கு டிபாசிட்டும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மன்சூர் அலிகான் தனது தோல்விக்கு மின்னணு இயந்திரம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் பல குழப்பங்கள் நடந்துள்ளது. திருச்சி தொகுதியில் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது வாக்குப் பதிவு இயந்திரம் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக எனது சின்னத்துக்கான பட்டனை அழுத்திய போது அதில் விளக்கு எரியவில்லை என ஓட்டு போட்டவர்கள் பலரும் என்னிடம் வந்து குறைபட்டு கொண்டார்கள்
நான் தேனி தொகுதியில் போட்டியிட்ட போதே 1 லட்சம் ஓட்டு வாங்கினேன். எனக்கு ஓட்டு போட்டவர்கள் 20 ஆயிரம் பேர் வரை போன் போட்டு பேசினார்கள். ஆனால் அந்த ஓட்டுக்கள் எங்கே சென்றது என தெரியவில்லை.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் அகர வரிசைப்படி இடம்பெறவில்லை. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பதிவு செய்த கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என பிரித்து அதில் அகர வரிசைப்படி இடம்பெற செய்தது சரியில்லை. இது ஜனநாயக முறையும் அல்ல.
மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தவிடமாட்டேன்...
சில வீடுகளில் ஒரே இணைப்பில் மின்விசிறியும் சுழலும் விளக்கும் வேலை செய்யும். அதே போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் உள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உண்மையை நிரூபிப்பேன். அடுத்து வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த விடமாட்டேன்.
இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் என்னை வேதனை அடைய செய்து உள்ளது. ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மற்ற தமிழர்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்றார் மன்சூர் அலிகான்.












Click it and Unblock the Notifications