நாராயணன்-மேனன் இன்று கொழும்பு பயணம்
புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், புலிகள் இயக்கத்தையும் ஒடுக்கிவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ள நிலையில் அங்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள், அதில் இந்தியாவின் பங்கு குறித்து அதிபர் ராஜபக்சேவுடன் விவாதிக்க இருவரும் இலங்கை செல்கின்றனர்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை இன்று டெல்லியில் நாராயணன் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய நாராயணன், இலங்கை விவகாரத்தில் கருணாநிதியின் ஆலோசனையைப் பெறவே அவரை சந்தித்தேன் என்றார்.
பிரபாகரன் குறித்து கேட்டதற்கு, எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்றார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து நான் பிரதமர் மற்றும் சோனியா காந்தியிடம் என்ன பேசினேனோ அதைத் தான் நாராயணனிடமும் கூறினேன். அவர் கொழும்பு போய்விட்டு வந்து என்னிடம் விளக்குவார் என்றார்.
முன்னதாக நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசு அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கு வாழும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்கச் செய்ய வேண்டும்.
ரூ. 500 கோடி நிதியுதவி..
இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். தற்போதைய புதிய சூழ்நிலையில், இடம் பெயர்ந்து வந்துள்ள முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கை அரசு செய்ய வேண்டும். இதற்காக இந்திய அரசு ரூ. 500 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தயாராக வைத்துள்ளது.
இதுதவிர கூடுதலாக ரூ. 100 கோடி நிதியுதவியையும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். தமிழக அரசும் ரூ. 25 கோடி நிதியுதவியை அளித்துள்ளது.
போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக இந்திய அதிகாரிகள் விரைவில் இலங்கை செல்வார்கள். அப்போது நிவாரண உதவிகளையும் இந்திய அரசு அனுப்பி வைக்கும் என்றார் அவர்.
இதன்படி மேனனும், நாராயணனும் கொழும்பு செல்கின்றனர்.