சென்னையில் பஸ் எரிப்பு-இலங்கை அகதிகள் கைது
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. சென்னையில் அரசு பஸ் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலையில், செங்குன்றம், புழல் பகுதிகளை இணைக்கும் ஜிஎன்டி சாலையில், புழல் அகதிகள் முகாமைச் சேர்ந்த எட்டு அகதிகள் போராட்டத்தில் குதித்தனர். அங்குள்ள தனியார் கல்லூரி அருகே நின்றபடி பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர்.
இதில் ஒரு பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது. பின்னர் ஒரு பஸ்சைத் தடுத்து நிறுத்தி கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பெட்ரோல் குண்டை வீசி
தீவைத்து எரித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார், திணேஷ் குமார், கனகராஜ், நிர்மல், சார்லஸ், ராஜேஷ்குமார், செல்வ மோகன், தனுஷன், லட்சியகாந்தன் ஆகியோரைக் கைது செய்தனர்.
பின்னர் இரவில் செங்குன்றம் சென்ற ஒரு அரசுப் பேருந்தை நான்கு பேர் மறித்து பஸ்சின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து விட்டுத் தப்பினர். டிரைவர் சோமனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராஜ்குமார் என்பவர் சிக்கினார். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.
கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 13 பஸ்களின் மீது கல் வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்ததாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை சென்ற டவுன் பஸ் ஒன்றை புளியம்பட்டி அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு வழிமறித்து கல்வீசி தாக்கியது.
இதே போல கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சென்ற ஒரு பஸ்சை மருதாநல்லூர் அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் கல்வீசி தாக்கியது.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பஸ்சும் இதே போல நேற்று முன்தினம் ஒன்பதுபுள்ளி என்ற கிராமம் அருகே தாக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பஸ் பண்டாரவாடை அருகே வழி மறித்து தாக்கப்பட்டது. இதில் 4 பஸ்களின் கண்ணாடிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் ஒரு பயணியும் காயம் அடைந்தார்.