நெல்லையில் காணாமல் போகும் காங். கொடிகள்
நெல்லை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்த செய்தி வெளிவந்ததை அடுத்து, நெல்லையில் பல இடங்களிலும் காங்கிரஸ் கொடிகள் திடீர் திடீர் என மாயமாகி வருகின்றன.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இதை விடுதலை புலிகள் இயக்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந் நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே காங்கிரஸ் கொடி கம்பத்தில் இருந்த கொடியை நேற்று யாரோ மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.
அதன் அருகே இருந்த திமுக கொடியையும் கீழே இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் தாழையூத்து, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் இருந்த காங்கிரஸ் கொடிகளையும் மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.
இப்படி நெல்லை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கொடி திடீர் திடீர் என்று காணாமல் போவதை அடுத்து போலீசார் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள காங் எம்பிக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு:
இந் நிலையில் தமிழகம் முழுவதும் தலைவர்களின் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை, டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை, ஜங்ஷனில் உள்ள ராஜூவ் காந்தி சிலை, உள்பட முக்கிய தலைவர்கள் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெரிக் சந்திப்பில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், ரேடியோ நிலையங்களிலும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறமால் தடுக்க மாவட்டம் முழுவதும் ரோந்து சுற்று வருகின்றனர். வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையங்களில் மப்டி உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பெருமாள்புரம், பழவிலை, ஞாறான்விளை ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருப்பதற்கும் போலீசார் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications