ஸ்ட்ரைக்-எம்ஆர்எப் தொழிலாளர்கள் கைது!
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எம்ஆர்எப் அரக்கோணம் யூனிட் தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
போலீசார் தொழிற்சாலைக்குள் புகுந்து தொழிலாளர்களை லத்தியால் அடித்து இழுத்துக்கொண்டு போய் கைது செய்ததாக ஐக்கிய தொழிலாளர் யூனியன் தலைவர் ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரபல டயர் தயாரிப்பு நிறுவனம் எம்ஆர்எப் குழுமத்தின் அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு குறித்து தங்களைக் கலந்து ஆலோசிக்காமல், தங்கள் எதிர் அணியுடன் பேசி ஒப்பந்தம் போட்டுவிட்டதாகக் கூறி ஐக்கிய தொழிலாளர் யூனியன் வேலை நிறுத்ததில் ஈடுபட்டது.
எந்த யூனியன் பெரியது என்பதில் இரு தரப்புக்குமே பெரும் விரோதம் நிலவும் சூழலில் நிர்வாகம் இப்படி எதிர்தரப்புடன் ஒப்பந்தம் போட்டதால், ஐக்கிய யூனியனுக்கு அது ஈகோ பிரச்சினையாகிவிட்டது.
இதனால் கடந்த மே 9-ம் தேதி முதல் நடக்கும் இந்த வேலைநிறுத்தம், நேற்று கதவடைப்பு என்ற கட்டத்துக்கு வந்தது. இதனால் முழுமையாக உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலையின் பணிகளை, ஆட்கள் நடமாட்டத்தைப் பாதிக்காத வகையில் இந்த போராட்டம் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுகுறித்த பதில் மனு தாக்கல் செய்யவும் 1 வாரம் அவகாசம் கொடுத்துள்ளது.
'அதற்குள் போலீஸை ஏவி எங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது நிர்வாகம்' என குற்றம் சாட்டுகிறார் சங்கர்.
அடுத்து தொழிலாளர் ஆணையரைச் சந்தித்து தங்கள் நிலை குறித்து விளக்கவுள்ள இந்த தொழிலாளர்கள், விரைவில் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகளையும் இரு மாநில கவர்னர் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பி வைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகிறார்களாம்.
எம்ஆர்எப் நிறுவனத்துக்கு சென்னை, அரக்கோணம், புதுச்சேரி, கோட்டயம் மற்றும் மேடக்கில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications