எல்டிடிஇ அரசியல் பிரிவு தலைவர் நடேசனின் மனைவியும் சுட்டுக் கொலை
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், புலித்தேவன் ஆகியோரை சுட்டுக் கொன்ற சில நிமிடங்களிலேயே நடேசனின் மனைவி விஜித்ராவையும் சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்று விட்டது. விஜித்ரா சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்தக் கொலை நடந்துள்ளது. மிகக் கொடூரமான முறையில் சிங்கள வீரர்கள், விஜித்ராவை பெண் என்றும் பாராமல் சரமாரியாக சுட்டுக் கொன்றதாக அந்த சமயத்தில் அங்கிருந்த சிங்கள செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடேசனும், புலித்தேவனும், கடந்த 18ம் தேதி அதிகாலை ஐந்தேமுக்கால் மணி வரையிலும் வெளியுலகத் தொடர்பில் இருந்து வந்தனர்.
இருவரையும் ராணுவத்திடம் சரணைடயுமாறு மூன்றாவது தரப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. மேலும், அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது தம்பியான பசில் ராஜபக்சே ஆகியோருடன் அந்த மூன்றாவது தரப்பு நேரடியாக ஆலோசித்து அதன் பின்னரே இந்த அறிவுரை வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களது மறைவிடத்திலிருந்து வெளியேறி ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களுடன் நடேசனின் மனைவி விஜித்ராவும் உடன் வந்துள்ளார்.
இருவரும் சரணடைந்தபோது, இலங்கை ராணுவத்திடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட விஜித்ரா, தான் ஒரு சிங்களப் பெண் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் நிராயுதபாணியாக சரணடைய வந்த நடேசனையும், புலித்தேவனையும் ஈவு இரக்கமின்றி ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
கண் முன்பாக கணவரையும், புலித்தேவனையும் வீரர்கள் சுட்டுக் கொன்றதைக் கண்டு கதறித் துடித்துள்ளார் விஜித்ரா.
சரணடைந்தபோது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என இலங்கைப் படையினரிடம் கதறி வாக்குவாதம் செய்துள்ளார்.
சிங்கள மொழியிலேயே பேசி அவர் வாதிட்டுள்ளார். ஆனால் முதலில் அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள், ஒரு கட்டத்தில் திடீரென சரமாரியாக விஜித்ராவை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் உடல் முழுவதும் சல்லடையைகத் துளைக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் விஜித்ரா.
பெண் என்றோ, சக சிங்கள இனத்தவரைச் சேர்ந்தவர் என்றோ பாராமல், மிகக் கொடூரமாக விஜித்ரா கொல்லப்பட்டதாக அந்த செய்தியாளர் கூறுகிறார்.
நடேசன் இலங்கை காவல்துறையில் பணிபுரிந்தவர். கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விஜித்ராவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்.
விஜித்திரா, தெற்கு மாகாணத்தில் உள்ள மாத்தறையைச் சேர்ந்தவர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கே வசித்து வந்தனர்.
அப்போது விடுதலைப் புலிகளுடன் தன்னை இணைத்துக் கொண்ட நடேசன், பின்னர் 1997ம் ஆண்டு வரை தமிழகத்தில் தங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
நடேசனின் மனைவி விஜித்ரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்தபோதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வந்ததுடன், தமிழ் மக்கள் பட்டு வந்த நெருக்கடிகளிலும் துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.