ராஜபாளையம் நகராட்சி மீண்டும் கலைப்பு-தமிழக அரசு அதிரடி
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியை மீண்டும் கலைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. வார்டு பணிகள் தொடர்பாக நகராட்சி தலைவர் ரத்தினம்மாள் மற்றும் துணைத் தலைவர் மணிகண்டனுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து தலைவர் ரத்தினம்மாளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 17 கவுன்சிலர்களும், துணைத் தலைவர் மணிகண்டனுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 23 கவுன்சிலர்களும் செயல்பட்டனர்.
இதனால் நகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்துவதிலும், தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சியை அரசு கலைத்தது. ஆனால், துணைத் தலைவர் மணிகண்டன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு முடிவில் ராஜபாளையம் நகராட்சியை கலைத்தது செல்லாது என்றும், இது தொடர்பாக அரசு உரிய விசாரணை மேற் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கவுன்சிலர்களின் கருத்துக்களை தமிழக நகராட்சி துறை செயலாளர் கேட்டறிந்தார். மக்களவை தேர்தல் நடைபெற்றதால் அது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நகராட்சி செயல்படாமல் இருக்க கவுன்சிலர்களின் விளக்கங்களில் திருப்தியில்லை எனவும், எனவே நகராட்சியை கலைத்ததை உறுதி செய்வதாகவும், வரும் 12.11.2009-க்குள் நகராட்சி தேர்தலை நடத்த பரிந்துரை செய்வதாவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் நகலை நகராட்சி துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அனைத்து கவுன்சிலர்களுக்கும் அனுப்பிவைத்தார்.












Click it and Unblock the Notifications