பிரபாகரன் மரணமா?-அதிர்ச்சியில் அண்ணன் குடும்பம்
கோபன்ஹேகன்: டிவியில் காட்டப்பட்ட உடலைப் பார்த்தபோது அது பிரபாகரனுடையதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்ல என்று டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தனது குடும்பத்துடன் டென்மார்க் நாட்டின், வெஜ்லே என்ற இடத்தில் வசித்து வருகிறார். அதேபோல, ஹெர்னிங் என்ற இடத்திலும் பிரபாகரனின் உறவினர் குடும்பம் உள்ளது.
பிரபாகரன் மரணச் செய்தி குறித்து கார்த்திக் மனோகரன் குடும்பத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். வீடியோவில் காட்டப்பட்ட உடல் பிரபாகரனுடையது போலவே இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை முழுமையாக அவர்கள் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனோகரன் கூறுகையில், இலங்கை டிவியில் காட்டப்பட்ட படத்தைப் பார்த்தபோது எனது தாயார் கதறி அழத் தொடங்கி விட்டார்.
முகத்தைப் பார்த்தபோது அது நிச்சயமாக அவருடைய முகம் போலவே இருக்கிறது. அவருடைய கண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, மிகப் பெரிய கண்கள் அவை.
ஆனால் எங்களால் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை. அதை எங்களால் ஏற்கவும் முடியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வது என்றும் புரியவில்லை. அவருடைய முகத்தை மட்டுமே காட்டினார்கள். கிராபிக்ஸ் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.
பிரபாகரன் குடும்பத்திருக்கும், தங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 3 மாதங்களாக எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் மனோகரன் தெரிவித்துள்ளார்.
எனது பாட்டி (பிரபாகரனின் தாயார்) அதிக தூரம் நடக்க முடியாதவர். சில நேரங்களில் பொது தொலைபேசியிலிருந்து எங்களுடன் பேசுவார். சில வேளைகளில் நாங்கள் வீட்டில் இல்லாவிட்டால் அவருடன் பேச முடியாமல் போய் விடும்.
இந்த நிமிடத்தில் எனது தாத்தா, பாட்டி ஆகியோர் என்ன ஆனார்கள், எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியவில்லை என்றார் மனோகரன்.
எனது தாத்தா, பாட்டி, சித்தப்பா மற்றும் குடும்பத்தினர் நிலை குறித்து இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி வரும் என நாங்கள் காத்திருக்கிறோம் என்றார் அவர்.