For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் உடல் தகனம் - மனைவி, மகள் மரணம் அடையவில்லை: ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உடலை எரித்து விட்டோம். அதேசமயம், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் மரணமடையவில்லை. அவர்களது உடல்கள் கைப்பற்றப்பட்டதாக முன்னர் தெரிவித்த தகவல் தவறானது என்று பல்டி மேல் பல்டியாக அடித்துள்ளார் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா.

பிரபாகரன் குறித்து தொடர்ந்து குழப்பமான தகவல்களையே அளித்து வருகிறது இலங்கை. முதலில் அவர் ஆம்புலன்ஸ் வேனில் தப்ப முயன்றபோது ராக்கெட் வீசித் தாக்கி கொன்றதாகவும், அதில் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிப் போய் விட்டதாகவும் கூறியது இலங்கை.

ஆனால் அடுத்த நாள் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது பிரபாகரன் மரணம் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

அன்று மதியமே திடீரென ஒரு உடலைக் காட்டி இதுதான் பிரபாகரன், நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் இதைக் கண்டுபிடித்தோம் என்று கூறியது இலங்கை அரசு. இந்த உடல் குறித்து பெரும் சர்ச்சை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பிரபாகரனின் மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோரின் உடல்களையும் நந்திக்கடல் பகுதியில் கண்டுபிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியது.

இருப்பினும் இதுகுறித்து எந்தத் தகவலையும், இலங்கை அரசு தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதனால் பெரும் குழப்பம் நிலவியது.

ஆனால் பிரபாகரனின் குடும்பத்தினர் உடல்களை கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் மரணம் அடையவில்லை என்று உதயநாணயக்காரா இப்போது பெரும் பல்டி அடித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் ராணுவம் மீட்கவில்லை.

ராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. ராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் ராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது என்றார் நாணயக்காரா.

கடைசி நாளின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் 60 கரும்புலி வீரர்கள் 5000 கிலோ வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு ராணுவத்தினர் மீது பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தியதாக நக்கீரன் இதழில் கூறப்பட்டுள்ளது.

எனவே கடைசி நாளின்போது ராணுவத்தினர் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

பிரபாகரன் உடல் எரிக்கப்பட்டு விட்டது - நாணயக்காரா

இதற்கிடையே, பிரபாகரனின் உடலை நந்திக் கடல் பகுதியிலே எரித்து சாம்பலாக்கி விட்டோம் என்றும் நாணயக்காரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூருகையில், நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை ராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என்று கூறியுள்ளார் நாணயக்காரா.

கைப்பற்றப்பட்ட உடல் பிரபாகரனுடையதுதானா என்ற சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் அந்த உடலை எரித்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X