'செக்ஸ்' டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: சட்டத்துக்கு புறம்பான வகையில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா நகரில் தனியார் மருத்துவமனை வைத்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் பிரகாஷ் என்பவர் கடந்த 2001 டிசம்பரில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து காரணத்துக்காகவும், அதை வைத்து அவர்களை மிரட்டிய குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் போதை பொருட்கள் வைத்திருப்பதையும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது மருத்துவமனையில் இருந்து 55 கிராம் எடை கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது நார்கோடிக் டிரக் சைகோடிராபி சப்ஸ்டன்ஸ் விதி பிரிவு 8 சி மற்றும் 21 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந் நிலையில் ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.
இந் நிலையில் நேற்று போதை பொருள் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் தனது தீர்ப்பில் கூறுகையில்,
நீதிமன்றத்தில் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களை வைத்து டாக்டர் பிரகாஷ் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அவர் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே ஆபாச படம் எடுத்த வழக்கில் இன்னும் 8 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை மீதமிருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் டாக்டர் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் மீது மோசடி வழக்கு ஒன்று இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications