பார்வதியை நான் மிரட்டவில்லை-நடிகர் கார்த்திக்
மதுரை: தேனியில் போட்டியிட்ட எனது கட்சி வேட்பாளர் பார்வதியை நான் மிரட்டவே இல்லை என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
கார்த்திக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர் பார்வதி. தேனி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்காக கார்த்திக் ரூ. 5 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், பிரசாரத்திற்கும் வராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் பார்வதி புகார் கூறியிருந்தார்.
மேலும், பல வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளதாகவும் அவர் குறறம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக மதுரை காவல்துறை ஆணையரிடம் புகாரும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பார்வதியின் புகார்களை கார்த்திக் மறுத்துள்ளார். மதுரையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தது பற்றி எனக்கு கவலை இல்லை. வெற்றி-தோல்வி இரண்டையும் சமமாக கருபவன் நான்.
இந்த தேர்தல் மூலம் நான் பல அனுபவங்களை கற்றுக் கொண்டேன். இதனால் இனி வரும் காலத்தில் சிறப்பாக பணியாற்ற இந்த சம்பவங்கள் உறுதுணையாக இருக்கும்.
கட்சி துவங்கிய 9 மாத காலத்தில் நான் வேட்பாளராக போட்டியிட்டு, 17 ஆயிரத்து 336 ஓட்டுகள் பெற்றுள்ளேன். இதில் எனக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும் 24 காரட் தங்கம் போன்றது. இனால் எனக்கு வாக்களித்த அனைத்து வாகர்காளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரையை அடித்தளமாக வைத்து கட்சியை மேம்படுத்தவும், நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்துள்ளேன்.
கட்சியின் வளர்ச்சிக்காகவும், தொகுதி மக்களின் மேம்பாட்டுக்காகவும் வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருநகரில் கட்சி அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பார்வதி என்ற பெண் வேட்பாளரை நான் மிரட்டி, ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாக என் மீது அவர் புகார் செய்துள்ளார். அது அப்பட்டமான பொய்.
இப்படி பிரச்சினைகள் வரலாம் என கருதியே முன்கூட்டியே முன் எச்சரிக்கையாக வீடியோ எடுத்துள்ளோம்.
எனவே அந்த பெண் என் மீது கூறிய குற்றச்சாட்டு பொய்யானது. யாரோ தூண்டுதலின்பேரில் அவர் என் மீது பழி சுமத்துகிறார்.
இது குறித்த ஆவணங்களையும், வீடியோ ஆதாரத்தை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளேன் என்றார்.