நாமக்கல் தீ விபத்து-அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தீ விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மே 6 - ம் தேதி அன்று நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் பரிதாமாக பலியானார்கள். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் எண்ணெய் ஆலையை நடத்திய ஆலை அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயகுமார் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு , இது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.