முன்கூட்டியே தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை - வங்கக் கடலில் புயல் சின்னம்
சென்னை: முன்பு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வங்கக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் ஐந்தில் நான்கு மடங்கு மழைப் பொழிவு காலம் தென் மேற்குப் பருவ காலம்தான். வழக்கமாக ஜூன் 1ம் தேதி இந்த மழைப் பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு வாரத்திற்கு முன்பாக அதாவது 25ம் தேதியன்று தொடங்கும் என முன்னறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கேரளாவில் பருவ மழை 3 நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது. கேரளா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
கேரளாவையொட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கூட ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு இயல்பான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம்...
இதற்கிடையே, வங்கக் கடலில் மத்திய கிழக்குப் பகுதியில், பாரதீபா துறைமுகத்திற்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்குப் பின் வடக்கு ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவ மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடி மழை இருக்கும். பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications