கனிமொழி மத்திய அமைச்சரவையில் சேர மாட்டார்?
டெல்லி: மத்திய அமைச்சரவையில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி இப்போதைக்கு அமைச்சரவையில் சேர மாட்டார் எனக் கூறப்படுகிறது.
அவராகவே அமைச்சரவையில் சேராமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்ட நிலையில் யார் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பதும் ஓரளவு உறுதியாகத் தெரிய வந்துள்ளது.
மு.க.அழகிரி வேதி மற்றும் உரத் துறை அமைச்சராகவும், தயாநிதி மாறன் ஜவுளித்துறை அமைச்சராகவும், ராசா மீண்டும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவியேற்கக் கூடும்.
இவர்கள் தவிர மற்ற நான்கு இணை அமைச்சர் பதவிகளுக்கு யாரை திமுக தேர்வு செய்துள்ளது என்பது உறுதியாகத் தெரியவி்ல்லை.
ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோரின் பெயர்கள் ஏற்கனவே அடிபட்டு வந்தன என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் தற்போது விஜயன் பெயர் இதில் அடிபடவில்லை. மாறாக நடிகர் நெப்போலியன், முன்பு அமைச்சராக இருந்த பழனி மாணிக்கம், காந்திசெல்வன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி ஏதும் தர முடியாது என்று காங்கிரஸ் கூறிவிட்டதால் கனிமொழி பதவியேற்க விரும்பவில்லை என்று தெரிகிறது.