தமிழகத்தில் மழை பெய்யும்-குமரியில் கடல் சீற்றம்!
கன்னியாகுமரி: குமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் குளச்சல், நித்திரவிளை, கொல்லங்கோடு, இறைமயன்துறை, பூந்துரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புசுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் தொடர்ச்சியாக வீடுகள் இடிந்து விழுந்தன.
குமரி கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடைந்ததுள்ளது, இதனால், கடந்த மூன்றாவது நாளாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
அத்துடன், குளச்சல் பகுதியில் நேற்று நள்ளிரவு கடும் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
நித்திரவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் பலத்தகாற்றுடன் கன மழை பெய்தது. இரயுமன்துறை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது.
கடல் அரிப்பு தடுப்புசுவரை தாண்டி ஊருக்குள் கடல் நீர்புகுந்தது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதன் தொடர்ச்சியாக வீடுகள் இடிந்து விழுந்தன.
தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யும்...
இதற்கிடையே வங்க கடலில் உருவாகியிருந்த ஐலா' புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், காற்று பலமாக வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தரைக்காற்று பலமாக வீசும் என்றும் சென்னை உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந் நிலையில் தொடர்ந்து இன்றும் மூன்றாவது நாளாக தென் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றமும் காணப்படுவதால் பொது மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
காலை முதலே குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்து வருகிறது.
பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. தொடர் மழை காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, சுருளோட்டி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
உவரியில் கடல் சீற்றம்...
அதே போல உவரி கடல் பகுதியில் ஆண்டுதோறும் மே மாதம் கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக உள்ளது. உவரி கப்பல் மாதா ஆலயம் முன்பாக உள்ள கடற்கரை பகுதி மற்றும் அந்தோணியர் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள் கடல் சீற்றத்தால் கவிழ்ந்தன. சுமார் 25 மீட்டர் அளவுக்கு கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளை அலை அடித்து சென்றுவிட்டது. இதனால் பைபர் படகுகள் கடலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது..
புதிதாக கட்டப்பட்ட வலை பழுது பார்க்கும் கூடமும் பாதி அரிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.