திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்-பக்தர்கள் பீதி
திருசெந்தூர்: திருசெந்தூரில் கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதையடுத்து சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்கள் ஒருவித தயக்கத்துடன் கடலில் நீராடினர்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னம், கடல் சீற்றம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால், கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
இந் நிலையில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திலுள்ள நாழிக்கிணறு அருகே இருக்கும் பகுதியில் கடல் சுமார் 25 அடி தொலைவு உள்வாங்கியது.
இதையடுத்து கோயிலுக்கு தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் கடலில் ஒரு வித தயக்கத்கோடு குளித்தனர்.
கடந்த டிசம்பர் 26, 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பின் திருச்செந்தூர் கடல் அடிக்கடி உள்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்கள் மத்தியில் கடும் பீதி நிலவி வருகின்றது.