தமிழர்களின் கண்கள்-சிறுநீரகங்களை விற்கின்றனர்-தா.பா
மதுரை: ஈழத் தமிழர்கள் குறி்த்து உண்மையான நிலவரத்தை கண்டறிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். அங்கு போரில் காயமடைந்தவர்களின் கண்களை, சிறுநீரகங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு விற்கப்படுவதாக மனித உரிமை கழகம் புகார் தெரிவித்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறுகையில்,
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லாததால், அந்த விஷயத்தை தற்போது விட்டுவிடுவதுதான் நல்லது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் இருக்கும் அப்பாவி தமிழர்களின் உண்மைநிலையைக் கண்டறிய நடுநிலையான தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
போரில் காயமடைந்த தமிழர்களின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளை வெட்டி எடுத்து அவற்றை இலங்கை அரசு வெளிநாட்டுக்கு விற்கப்பதாக மனித உரிமைக் கழகம் புகார் தெரிவித்துள்ளது. இச்செயல்களை இந்தியா கண்டிக்க வேண்டும். அவற்றை உடனடியாக தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் அளிக்க இந்திய அரசு உடனடியாக இலங்கைக்கு மருத்துவர்களை அனுப்ப வேண்டும் என்றார் தா.பாண்டியன்.